
விரும்பிய மனங்களின் நெருங்கிய இயக்கத்தில்,
அமைதியை கிழித்தெறியும் ஆர்பாட்ட இசையில்,
தாயாம் இயற்கையின் ஒன்பதுமாதத் தயாரிப்பில்,
வெளிவரும் காவியத்தின் நாயகனே நீயோ?
கைக்குள் அடங்கும் குங்குமச் சிமிழ்போல்,
பூதங்கள் ஐந்தால் சிவப்பை மறைத்து,
வளர்ந்து படர்ந்து நெளிந்து மெலிந்து,
மண்ணில் கலக்கும் பொருள்தான் நீயோ?
அறியாமை பிரிந்து பகுத்தறிவு நுழைந்தும்,
தன்னை ஏற்றிப் பிறரைத் தூற்றி,
தான்தான் முதலேனும் பேதமை புகுந்த
அஹங்காரத் திமிரின் உணர்வே நீயோ ?
ஐம்புலன் வழியே உள்வரும் அறிவு!
அவ்வறிவால் மலரும் மனதின் ஒலி!
அவ்வொலியால் மிளிரும் உடலின் செயல்!
அச்செயலால் நிகழும் மாற்றம் கொண்டு
ஐம்புலன் வழியே உள்வரும் அறிவு.
இச்சுழலின் நடுவே விழிப்புடன் அமர்ந்து,
உடலின் மனதின் எல்லையை உணர்ந்து,
பன்மைத் தகர்த்து ஒருமைப் புரிந்து,
மிதப்பில் ஒளிரும் விழிப்பே நீயோ!

1 comments:
Azhagana kavithai, may I suggest Agangaram instead of Ahangaram ? on 12 th line
Post a Comment